Sunday, March 1, 2009

பெருமாளே! உனக்கு இந்த கதியா? :((((((

என் மாமனார் காலம் வரையில் எங்கள் குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலின் வெளிப் பிரகாரம் நீங்கள் காண்பது. இந்தக் கோயிலின் இந்தக் கருங்கல் சுவர்கள் இங்கே இருந்த மற்றொரு மாடக் கோயில் ஆன லிங்கத்தடி சிவன் கோயிலின் இடிந்த மிச்சங்கள் என இந்தக் கற்களால் ஆன கல்வெட்டுகள் கூறுவதாய்ச் சொல்கின்றனர். இது பற்றித் தொல்பொருள் ஆய்வாளர்கள் தான் ஆய்வு செய்யவேண்டும். வலை உலக நண்பர் திரு ப்ளாஸ்டிக் சந்திரா மூலம் திரு சத்திய மூர்த்தி சென்று பார்த்து இதை உறுதி செய்திருக்கின்றார். எனினும் கல்வெட்டுகள் படிக்கப் படவேண்டும்.
கோயிலின் இன்றைய நிலையை இது சுட்டிக் காட்டுகின்றது. பெருமாளுக்கு அரை வேலிக்கு மேல் நிலம் உள்ளது. கருகமரத் தோப்பு உண்டு. ஆனால் பெருமாளுக்குத் தினப்படி சாப்பாட்டுக்கே கஷ்டப் படுகின்றார். விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாமல், பசிக்குச் சோறு இல்லாமல், மாற்றுத் துணி இல்லாமல், அபிஷேக ஆராதனைகள் இல்லாமல் பெருமாள் படும் கஷ்டம் தாங்க முடியவில்லை.
கோயிலின் பிரதான வாயிலின் நிலைமை. இன்னும் மழைக்காலத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் மாட்டுத் தொழுவமாகவும் பயன்பட்டு வருகின்றது.
பிரகாரத்தின் மற்றொரு பக்கம்.
இந்தக் கோயிலைப் புனருத்தாரணம் செய்ய ஆகாயத்தில் இருந்து கங்கையைக் கொண்டு வந்த அந்த பகீரதனைப் போலவே முயன்று கொண்டிருக்கின்றோம். முயற்சி வெற்றி பெற அந்தப் பரந்தாமன் தான் அருளவேண்டும். உலகையே காக்கும் அவனுக்குத் தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாதென்பதில்லை. மனிதர் இன்னும் எவ்வளவு கீழே இறங்க முடியும் என்று எடுத்துக் காட்டுகின்றான்.பிரதான வாயிலின் மற்றொரு தோற்றம். மூலவரின் தோற்றம். பொதுவாய் மூலவரைப் படம் பிடிப்பதில்லை. ஆனால் இங்கோ பெருமாள் தனக்கு வீடு மழைக்கு ஒழுகாமல், வெயிலுக்குக் காயாமல், தினம் ஒருவேளை சோறாவது வேண்டும் என்ற வேண்டுதலோடு நிற்கின்றார். பிச்சை எடுக்கும் நபர் நேரில் வந்தால் தானே கிடைக்கும்? ஆளை அனுப்ப முடியுமா? அனைவரின் உதவியினாலும், பிரார்த்தனையாலும் இவருக்கு ஒரு வழி பிறக்கவேண்டும். இப்போதைக்கு எங்களால் முடிந்தவரையில் தினமும் ஒருவேளை விளக்கேற்றி, நிவேதனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றோம். என்றாலும் வந்து வழிபாடு நடத்துபவர் ஒண்ணும் சந்நியாசி அல்ல. ஆகையால் கொஞ்சமாவது குத்தகைக்காரங்க மனசும் வைக்கணுமே? இப்போதைய அறங்காவலர் சரியாக அறத்தைக் காக்கும்படி பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.