கருவிலிக்கொட்டிட்டை என்ற பெயரில் காணமுடியும். அப்பர் திருக்குறுந்தொகைப் பதிகத்தில் முதல் இரண்டு பதிகம் கீழே காணலாம்.
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
5.69.1
692
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.
சுவாமி பெயர் சற்குணேஸ்வரர், அம்மன் பெயர் சர்வாங்க சுந்தரி. அம்மன் உயரம் ஐந்தரை அடி உயரம். நேரே நின்று நம்மோடு பேசுவாள். ஒன்பது கஜம் புடைவை உடுத்தினால் நம்மோடு நெருங்கியவர் யாரோ நேரில் நின்று பேசுகிறாப்போல் இருக்கும். இந்தக் கோயிலுக்கும் திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. கல்கி சேர்மனாக இருந்த திரு வைத்தியநாதன் அவர்களின் சகோதரர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாருதி உத்யோக் சேர்மன். அவர் இந்த ஊர்க்காரர் தான். அவரின் பாட்டியும், என் மாமனாரின் பாட்டியும் உடன்பிறந்த சகோதரிகள். அக்கா கருவிலியிலும், தங்கை பரவாக்கரையிலும் வாழ்க்கைப் பட்டிருக்கின்றனர். இங்கே அக்கா கணவர் சிவன் கோயில் ட்ரஸ்டியாக குழந்தை ஐயர் என்ற பெயரில் இருந்திருக்கிறார். பரவாக்கரையில் தங்கை கணவர் சாம்பசிவம் பெருமாள் கோயில் ட்ரஸ்டியாக இருந்துள்ளார்.
குடும்பம் ஊரை விட்டே செல்ல கோயில் கவனிப்பாரின்றி இருந்தது. திரு கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் டெல்லியிலேயே பல வருடங்கள் வாசம். ஊர் நினைப்பே இல்லாமல் இருந்தவருக்குத் திடீரெனக் கனவில் வந்து இறைவன் என்னைக் கவனிக்கவில்லையே எனக் கேட்க, அவர் தன் மூலங்களை ஆராய்ந்து கொண்டு கண்டுபிடித்துக் கருவிலிக்கு வந்து முதன் முதல் அங்கே இருந்த அனுமன் கோயிலைச் செப்பனிட்டார். பின்னர் பெரும் முயற்சி எடுத்து சிவன் கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். முதல் முறையாகப் பல வருடங்கள் கழித்துக் கும்பாபிஷேஹம் தொண்ணூறுகளின் கடைசியில் நடைபெற்றது. அதன் பின்னர் நாங்கள் ஊர்க்காரர்கள், மற்றும் தெரிந்தவர், அறிந்தவர் அனைவரும் வைப்புத் தொகையில் நிதியைச் சேர்த்து முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் தினசரி கைங்கரியம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது ஆறுகால வழிபாட்டோடு, சமீபத்தில் நான்கு ஆண்டுகள் முன்பு ராஜ கோபுரம் கட்டப்பட்டுக் கோயிலில் நடராஜர் சிலை புதியதாய் பிரதிஷ்டை செய்யப்பட்டு எல்லா உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.
கோயிலின் ஒரிஜினல் நடராஜர் பாலூர் நடராஜரோடு சேர்ந்து வெளிநாடு போய்விட்டார்.