Saturday, August 13, 2011

ஆகாச மாரியம்மன் கோயில்!

 
Posted by Picasa
கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோயிலில் உள்ள ஆகாச மாரியம்மன் கோயில் இது. இங்கே எந்நாளும் இப்படி தீபம் மட்டுமே எரியும் கருவறை இருக்கிறது. இங்கே அம்மனுக்கெனத் தனியாக சுதைச் சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது. ஏனெனில் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை. மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாயும், அது முதல் அவன் வேண்டுகோளின்படி ஒவ்வொரு வருடமும் சமயபுரத்தில் இருந்து ஆகாய மார்க்கமாய் இங்கே வந்து காட்சி கொடுக்கச் சம்மதித்ததாகவும் கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இது அறுநூறு ஆண்டுகள் முன்னர் நடந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இந்நிகழ்வு நடந்தது வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை என்று சொல்லப் படுகிறது. ஆகவே ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் முதல்வெள்ளிக்கிழமை அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பித்துப் பத்து நாட்கள் நடக்கின்றது. ஊரே கூடி நடத்தும் விழா கடைசிநாளன்று அம்மனுக்கு விடையாற்றிக் கண்ணீரோடு வழி அனுப்புவதோடு முடிகின்றது. அம்மனை தர்ப்பையால் ஒவ்வொரு வருடமும் உருவாக்குகின்றனர். பத்து நாட்களும் செப்புக்குடத்தில் கலசம் வைக்கப்பட்டு விழா எடுக்கப்படுகின்றது. கலச நீரும் அம்மனுக்குச் சார்த்தப்படும் எலுமிச்சை மாலையின் எலுமிச்சம்பழமும் பிரசாதமாய் பக்தர்களுக்குத் தரப்படும். தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காண முடியும்.

ஆதி அந்தமில்லாப் பெரும் ஜோதியான அம்பிகை சிறிய உருவத்துடன் உருவாக்கப்பட்டுக் கடைசியில் பத்தாம் நாளன்று வளர்ந்து இராஜராஜேஸ்வரியாய்க் காட்சி அளிப்பாள். அதன் பின்னர் அம்பாளுக்குப்பிரார்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு பக்தர்களால் காவடிகள் எடுக்கப் பட்டு சமயபுரத்துக்கு அம்பாளை எழுந்தருளச் செய்கின்றனர். நாச்சியார் கோயிலில் வேறு கிராமத் தெய்வங்களோ, காவல் தெய்வங்களோ கிடையாது. இந்தக்கோயில் ஒன்று தான் உள்ளது. இந்த வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர மற்ற நாட்களில் இங்கு ஜோதி வடிவில் அம்பாள் காட்சி கொடுத்து அருள் பாலிக்கிறாள். திருவிழா சமயத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன் என்றாலும் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட அம்மனின் புனிதத் தன்மை கருதிப் படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. இப்போது சமீபத்தில் சென்ற போது ஜோதி வடிவில் காட்சி அளித்த அம்பிகையைப் படம் எடுத்துக் கொண்டேன்.

2 comments: