Saturday, June 11, 2011

பேச்சி அம்மனைப் பார்த்தால் பயமா??

 
Posted by Picasa
பேச்சி அம்மன் வரலாறு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி சொல்லப்படுகிறது. இங்கே பேச்சி அம்மன் மன்னனையும், ராணியையும் காப்பாற்றிவிடுகிறாள் என்கின்றனர். எங்க ஊர் மாரியம்மன் கோயிலின் நுழை வாசலில் பல வருடங்களாய் மாரியம்மனுக்குத் துணை இருக்கும் பேச்சி அம்மன் இவள். இவளைப் பற்றிய கதை பல விதங்களில் சொல்லப் படுகிறது. அதில் ஒன்று பெரியாச்சியும், பேச்சியும் ஒருவரே என்பது. இதைப் பலரும் நிரூபித்திருக்கின்றனர். முக்கியமாய்த் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூரில் குடியேறிய பலருக்கும் பெரியாச்சி என்ற பேச்சியம்மனே குலதெய்வமாக இருந்து வருவதை திரு நா. கணேசன் சுட்டுகிறார்.

அவர் கொடுத்த சுட்டியின்படி வல்லாளன் என்ற பாண்டிய அரசன் கொடுங்கோலனாக இருந்ததாயும், அவன் மனைவி கர்ப்பவதியாய் இருந்த சமயம், அந்தக் குழந்தை பிறந்தால் கொடுங்கோலனின் குழந்தையும் தன் கொடூரத்தால் இவ்வுலகையே அழிக்கும் என மக்கள் பயந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. ராணிக்குப் பிரசவ வலி எடுக்க, தக்க மருத்துவம் செய்யவேண்டி அரசன் மருத்துவச்சியின் உதவியை நாடுகிறான். மன்னன் தன் வீரர்களை அனுப்புகின்றான் மருத்துவச்சியைக் கூட்டி வரச் சொல்லி. ஆனால் எல்லாருமே பயப்படுகின்றனர் என்பதோடு வரவும் மறுக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் தானே தக்க மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லுகையில் அவன் எதிரே கடுமையான முகத்தோற்றத்தோடு கூடிய ஓரு பெண்மணி தென்பட்டாள். அவள் தன் பெயரைப் பெரியாச்சி என்று கூறினாள். மன்னன் தேடும் மருத்துவச்சி அவள் தான் என்றாள். ஆனால் உண்மையில் அவள் அசுரர்களுக்கும், துர்தேவதைகளுக்குமான தலைமைக் கடவுள். ஆனால் மன்னனுக்கு இந்த உண்மை தெரியாது. பிரம்மா அசுரர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் படைத்தபோது தேவர்களும், மனிதர்களும் ஒரே கடவுளரை வணங்கி வர, அசுரர்களும், துர் தேவதைகளும் தங்களுக்கெனத் தனியான கடவுளை வணங்கினார்கள். அத்தகையதொரு பெண் தேவதையே பெரியாச்சி அம்மன் ஆவாள். இதை அறியாத மன்னனும் தன் மனைவியின் பிரசவத்திற்காக அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறான்.

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. ராணியின் வேதனையைப் பெருமளவு குறைக்கிறாள் பெரியாச்சி. அதோடு குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாகவும் விடவில்லை அவள். அதற்குப் பதிலாகக் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்துகிறாள். பிரசவம் ஆனதும் மன்னனிடம் பிரசவம் பார்த்ததற்குத் தனக்குப் பரிசுகள் தருமாறு கேட்கிறாள் பெரியாச்சி. ஆனால் மன்னனோ, ஒரு சாதாரண மருத்துவச்சியான அவள் ஒரு பேரரசனிடம் பணமும், பரிசும் கேட்டதற்குப் பெரியாச்சியை இகழ்ந்து பேசுகிறான். தர மறுக்கிறான். வைத்தியத்திற்கான செலவையும் கொடுக்க மறுக்கிறான். பெரியாச்சியைத் தன்னுடைய அடிமை என்றும், தான் சொல்வதைக் கேட்டு நடப்பது அவள் கடமை என்றும் உறுதியாகக் கூறுகிறான். கோபம் கொண்ட பெரியாச்சி தன் சுய உருவைக் காட்டுகிறாள். எண்ணற்ற கரங்களோடும், நீண்ட நாக்குடனும், பயங்கரத் தோற்றத்தோடு காட்சி அளித்த பெரியாச்சி மன்னனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக்கொண்டு ராணியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் குடல்களைத் தன் கரங்களால் வெளியே எடுக்கிறாள்.

குடலைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். அதைக் கண்ட மன்னன் தன் அன்பு மனைவி பெரியாச்சியின் கரங்களில் சின்னாபின்னமானதைக் கண்டு வருந்துகிறான். ஆனால் பெரியாச்சியோ மன்னனையும் கொன்று விடுகிறாள். அவன் குழந்தையும் இந்த பூமியில் காலை வைக்கா வண்ணம் தன் கரங்களிலேயே ஏந்திக்கொண்டு தடுத்துவிடுகிறாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னனுக்கும், அவனுக்குப் பல விதங்களிலும் துணை போன அவன் மனைவிக்கும், பிறக்கையிலேயே அசுரனாகப் பிறக்கவிருந்த அவன் குழந்தைக்கும் இவ்விதம் பெரியாச்சியின் மூலம் முடிவு கிடைக்க, மக்களுக்கு நன்மை விளைகிறது. இந்தப் பெரியாச்சி வேறு யாரும் இல்லை என்றும் மஹாகாளியின் இன்னொரு அவதாரமே என்றும் கூறுகின்றனர். ஏனெனில் அசுரர்களின் தேவதை என்று கூறப்பட்ட இவள் நாட்டு மக்களுக்காக வேண்டி நன்மையை விளைவித்ததாலும், தன்னுடைய சக்தியை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தியதாலும், இவள் அனைவராலும் அன்றிலிருந்து குலதெய்வமாக வணங்கப்பட்டாள் என்றும், குழந்தைப் பேறு அடையவும், குழந்தைப் பேறு அடைந்தவர்களின் குழந்தையைக் காக்கவும், சுகப் பிரசவம் நடக்கவும் இவளைப் பிரார்த்தித்துக்கொள்வது மக்களின் வழக்கமாயிற்று என்கின்றனர்.

ஆனால் தஞ்சையில், கும்பகோணத்தில் வழங்கும் கதை சற்றே மாறுபட்டது. அதை நாளைக் கேட்போம்.

காப்புரிமை: ரமேஷ்குமார்

Thursday, June 2, 2011

பிள்ளையார் கேட்ட 108 தேங்காய்கள்!

 கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகருக்கு 108 தேங்காய் உடைக்கிறதாய் வேண்டுதல். பொதுவாய் நான் ரொம்ப வேண்டிக்கவே மாட்டேன். ஆனால் நாங்க திருக்கைலை யாத்திரை போகும் முன்னர் கும்பகோணம் போய் பகவத் விநாயகருக்குப் பழைய பாக்கி என் கணவர் வைச்சிருந்த 108 தேங்காய் வேண்டுதலை நிறைவேற்றினோம். அப்போத் தான் அதற்கு அடுத்த மாசம் கைலை யாத்திரைப்பயணம் துவங்கணும்.
 அப்போ வேண்டிக்கொண்டேன், நல்லபடியாப்போயிட்டு வந்ததும் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு. அதை இத்தனை நாட்களா நிறைவேற்ற முடியலை. சென்ற வாரம் ஒரு சொந்தக் காரியமா ஊருக்குப் போனப்போ வீட்டிலே தென்னை மரத்திலே தேங்காய் பறிச்சிருந்தாங்க. அதை நான்கு நாட்களா உரிச்சு எடுத்தார் நம்ம ரங்க்ஸ், பாவம். வண்டியிலேயே போனதால் வண்டியிலே தேங்காய் மூட்டையைப் போட்டுண்டு போயிட்டோம். பாவம் கூட வந்த சம்பந்திகள் சூட்கேஸ் வைக்க இடமில்லாமல் போச்சு! :௶
 
Posted by Picasa
சனிக்கிழமை சாயந்திரமே தேங்காய்களை உடைச்சோம். எங்க சம்பந்தி, நம்ம ரங்க்ஸ், வண்டி ஓட்டிய டிரைவர் மூணு பேருமே உடைச்சாங்க. நானும் சாஸ்திரத்துக்கு ஒண்ணு உடைச்சேன். சம்பந்தி அம்மாவும் உடைச்சாங்க.