Saturday, May 28, 2011

வறண்ட கொள்ளிடத்தில் பயணம், :(

 இம்முறை கும்பகோணம் சென்றபோது காரிலேயே செல்ல நேர்ந்தது. கொஞ்சம் வருத்தம் தான். என்ன இருந்தாலும் ரயில் மாதிரி வராது. அதுவும் திடீர்னு பயணத்திட்டம் கன்னா அண்ட் பின்னாவாக மாற்றப்பட்டதால் முன்னர் ஏற்பாடு செய்திருந்த ஏ.சி. வண்டி கிடைக்காமல் சாதாரண வண்டியிலேயே போனோம். போகும்போது சென்னையிலே மழை கொட்டித் தீர்த்தது. போனதும் கும்பகோணத்தில் கொட்டித் தீர்த்தது. ஒண்ணும் தெரியலை. வரச்சே ரொம்பக் கஷ்டப் பட்டோம். அதுவும் அணைக்கரைப்பாலம் உடைஞ்சிருந்ததைச் செப்பனிடவே இல்லை. ஒரு பக்கப் பாலத்திற்கு முன்னரே அரசுவண்டிகள் நின்றுவிடும். அதுவும் கடந்த ஐந்து வருடங்களாக வண்டிகள், பேருந்துகள் அங்கே நிற்கும். கனரக வாகனங்கள் அனைத்தும் அங்கேயே நிற்கும். கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை மட்டும் அநுமதித்துக்கொண்டிருந்தனர். இம்முறை சென்னை-கும்பகோணம் செல்லும் மார்க்கத்தின் முதல் பாலத்தில் கார், ஆட்டோ செல்ல அநுமதி. இரண்டாம் பாலத்தை மூடி விட்டார்கள். ஆகவே கொள்ளிடத்திலே வண்டி இறங்கித் தான் போச்சு. என் கல்யாணம் ஆகி முதல் முதல் ஊருக்கு வந்தப்போ அரசலாற்றில் இறங்கினது நினைவு வந்தது. அப்போ மாட்டு வண்டி, ஆறும் சின்னது அரசலாறு. இப்போப் பெரிய வண்டி, கார். கொள்ளிடம்.
[Image] முன் கூட்டித் தயாராய் இல்லாததால் சட்டுனு படம் எடுக்க முடியலை. அதனால் திரும்பி வரச்சே தயாராய்க் காமிராவை வைத்துக்கொண்டிருந்தேன். அப்போ எடுக்கப் பட்ட படங்கள் இவை. இதைப் பார்த்தால் கொள்ளிடத்தில் மணல் எவ்வளவு ஆழமாய் அள்ளப் பட்டிருக்கிறது என்பதும் புரிய வரும். :(
 
 
 
 கீழே உள்ள படத்தில் காணும் இடத்தில் தான் எதிர்க்கரைக்கு மேலே ஏறவேண்டும். கரை நல்ல உயரமாகத் தான் இருக்கு.
 
Posted by Picasa
மணலும், இல்லாமல் நீரும் ஓடாமல் ஆறு வறண்டு போய்க் கற்களாய்க் காட்சி அளிக்கிறது. கல் மனம் படைத்து அன்பும், கனிவும் இல்லாத மனிதனைப் போல் காண்கிறது. :((((((( பூமித் தாயின் மார்பகங்கள் வற்றிவிட்டனவோ எனத் தோன்றுகிறது.

Thursday, May 26, 2011

வாலியும் சுக்ரீவனும் போடும் முடிவில்லாச் சண்டை

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்தின் உள்ளே உள்ள அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் முன் மண்டபத்தின் தூண்களின் சில அற்புதச் சிற்பங்கள். அதிலே இந்த வாலி, சுக்ரீவன் சிற்பமும் ஒன்று. இருவரும் எவ்வளவு கோபமாய்ச் சண்டை போடுகிறார்கள். என்னுடைய ஒரு முக்கியமான பதிவுக்குத் தேவைப்படும்னு எடுத்தேன். பார்த்தால் அடுத்தடுத்து அழகான சிற்பங்கள். எதை எடுப்பது, எதை விடுவதுனு புரியலை. முடிந்தவரை சிலவற்றை எடுத்துக் கொண்டேன். ஒண்ணொண்ணா வரும்.

Wednesday, May 11, 2011

தாமரை பூத்த தடாகமடி!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் காசி மடத்தில் ஒரு அழகான தாமரைக் குளம் இருக்கிறது. தாமரைகள் அனைத்தும் வெண்தாமரைகள். செந்தாமரையும் வைச்சாங்களாம், அது என்னமோ சரியா வரலையாம். ஒவ்வொரு பூவும்(பூக்களும் என்றால் தப்பில்லை??) பெரிசு பெரிசாக சாதம் பிசைஞ்சு சாப்பிடலாம் போல! அங்கே நடுவே உள்ள மண்டபத்தில் ஜம்முனு நம்மாளு வெள்ளைவெளேர்னு பளிங்குக்கல்லில் உட்கார்ந்திருக்கிறார். அநுமதி கேட்டுட்டு இரண்டையும் க்ளிக்கினேன்.  
Posted by Picasa
மாயவரம் வேதபாடசாலையில் இருந்து ஒரு சின்னப் பையர், (நிஜம்மாவே சின்னவர் 20 வயசுக்குக் கீழே தான் இருக்கும்) மடத்திலேயே தங்கிக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு அங்கே இருக்கும் சிவன் கோயிலுக்கும், இந்தப் பிள்ளையாருக்கும் தினப்படி கைங்கரியம் செய்து வருகிறார். வாரம் ஒரு முறை மாயவரம் போய் உறவினரைப் பார்த்துட்டு வருவாராம். நாங்க போனப்போ ஸ்ரீகுருமஹா சந்நிதானம் அவர்களும், இளைய சந்நிதானம் அவர்களும் காலை வழிபாட்டுக்காக இந்த நீராழி மண்டபத்திற்கு வந்து கஜமுகனின் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்து, நிஜமான கஜேந்திரனுக்கும், கோ பூஜையும் செய்தார்கள். நம்மாளு என்ன அழகாய்த் தலையைத் தலையை ஆட்டினார் தெரியுமா? முன்னால் அநுமதி வாங்காத காரணத்தால் அதை வீடியோ எடுக்க முடியலை. :( நம்மாளின் படம் ஏற்கெனவே போட்டேன். இருந்தாலும் அலுக்காதே, திரும்பவும் போடறேன்.  
Posted by Picasa

வாலியும், சுக்ரீவனும் மோதிக்கிறாங்க!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்திலே உள்ளே உள்ள தூண்களின் சிற்ப வேலைப்பாடு அதி அற்புதமாக இருந்தது. ஒரு சில தூண்களில் உள்ள சிற்பங்களை மட்டும் படம் பிடித்தேன். அதிலே இந்த வாலி, சுக்ரீவன் சிற்பமும் ஒன்று.

Tuesday, May 3, 2011

ஆனைக்கு ஒரு coloumn பூனைக்கு ஒரு coloumn

 
Posted by Picasa
முன்னாடி நாய் கடிச்சுக் குட்டிகளோட செத்துப் போச்சே, அதுக்கப்புறமா வந்திருக்கு இந்தச் செல்லக்குட்டி. இது குட்டி போடறதுக்கு முன்னாடி. குட்டி போட்டாச்சு இப்போ. எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்கு. பாவம், பிழைச்சுப் போகட்டும். இந்தப்பூனைக்குட்டிகள் பற்றிய ஒரு கதை வேறே படிச்சேனா, மனசே சரியில்லை, குட்டி எல்லாம் நல்லபடியா இருக்கணுமேனு கவலை. :((( கடுவன் பூனை வந்து குட்டிகளைக் கொன்னுடுமாமே?? நிஜமா??? ஒரு கதையிலே படிச்சேன். இதோட குட்டிகள் கண்ணிலே படலை. வேறே எங்கேயோ ஒளிச்சு வைச்சிருக்குப் போல. நல்லவேளை, கடுவன் பூனையும் இப்போக் கொஞ்ச நாட்களா வரலை.

Thursday, April 28, 2011

தீமிதிக் குண்டம்!

 
Posted by Picasa
சென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.

இந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே காவடியின் ஒரு வகையைப் பார்க்கலாம். 
Posted by Picasa
இங்கே இன்னொருத்தர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார்.  
Posted by Picasa
முதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால், 
Posted by Picasa
ஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.  
Posted by Picasa

Wednesday, April 27, 2011

ஆனை, ஆனை, அழகர் ஆனை!

 
Posted by Picasa
ஆனைக்குட்டிக்கு மூணு வயசாம். ரொம்பவே விஷமம் பண்ணுது. சும்மாவே இருக்கிறதில்லை. தலையைத் தலையை ஆட்டிண்டு அதுபடுத்தற பாடு! பார்க்கப்பார்க்க அழகு!