Wednesday, July 22, 2015

ஶ்ரீரங்கம் ரங்குவை விடப் பெரிய ரங்கு யார் தெரியுமா?

இந்த வலைப்பக்கம் பதிவிட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறது. மற்றப் பதிவுகளில் வராத படங்களை இங்கே பகிரலாம் என்று ஓர் எண்ணம். 


இன்னம்புராரைப் பார்க்கக் காரைக்குடிக்குச் செல்லும் வழியில் திருமயம் கோயில்களைப் பார்த்தோம். முதலில் பெருமாள் கோயில். அப்போது எடுக்கப்பட்டது. இதைக் குறித்து முழுதும் எழுதி முடிக்கவில்லை. பாதியிலேயே நின்று விட்டது. அதே போல் தான் கொளஞ்சியப்பர் கோயில் போனதும் பாதியிலேயே நின்று விட்டது.



உள்ளே செல்லும் வழி. நம்ம முன்னோர்கள் நிறையவே இருந்தனர். ஆகையால் காமிராவை எடுக்கவே பயமாகத் தான் இருந்தது. வெளியே நின்ற வண்ணம் எடுத்த படம் இது. 


குடவரைக் கோயிலான இங்குள்ள மூலவர்  திருமெய்யர் (பள்ளி கொண்ட பெருமாள்) இந்தியாவிலேயே பெரிய திருமேனி என்கின்றனர். 108 திவ்ய தேசத்திலே 43 ஆம் திவ்யதேசம் ஆகும்.  இதை ஆதிரங்கம் என்றும் கூறுகின்றனர். ஶ்ரீரங்கம் ரங்குவை விட இவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரியவர். பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவருக்குத் தைலக்காப்பு!

Sunday, February 16, 2014

நைமிசாரண்யம் மேலும் சில படங்கள்.


அன்னபூரணியின் சிற்பம்.  இங்கே ஆதி சங்கரரின் அன்னபூர்ணாஷ்டகம் எழுதப்பட்டுள்ளது.




அன்னபூரணிக்கு எதிரே சிவன் காட்சி அளிக்கிறார். 

Tuesday, February 11, 2014

நைமிசாரண்யம்--- இன்னும் சில!


நைமிசாரண்யத்தில் சக்கரதீர்த்தத்தைச் சுற்றி உள்ள ஓர் இடத்தில் பிரம்மா!



யாக குண்டத்தின் ஓர் அமைப்பும், யாகத்தில் போடக் காத்திருக்கும் பொருட்களும்.  நம்ம ஊர் மாதிரித் தொடர்ந்தெல்லாம் யாகம் செய்யலை.  நாம் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நம் கோத்திரம், பெயர், நக்ஷத்திரம் சொல்லி அரை மணி செய்கின்றனர்.


Sunday, October 27, 2013

விந்திய மலைத் தொடர்!

கார்லே போகையிலே விந்திய மலைத் தொடரின் ஒரு சிறிய குன்றுப் பகுதியை மட்டும் எடுக்க முயன்றதில் வந்த படம் இது.  அடுத்துக் கீழே புல் தரையில் மேயும் மாடுகளும், பின்னணியில் இன்னொரு துணைக்குன்றும்.



அடுத்துக் கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன்.  காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது.


இரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது.  பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா.  அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச்  சாப்பிட்டு விட்டார்.  ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.  இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது.  சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க.  அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு! :))))

Saturday, October 26, 2013

விந்திய மலைச்சாரலிலே!

சதி அநுசூயா ஆசிரமம் செல்லும் வழியிலே மலைச்சாரல்களின் அழகு கொஞ்சும் காட்சிகள்.


கீழே மந்தாகினி நதி ஓடுகிறாள்.  அதைத் தனியாகக் கொடுக்கிறேன். 


அழகைக் கெடுக்கும் வண்ணம் கடைகள் இருக்கின்றன.  அதைத் தவிர்க்க முயன்றால் சரிவு சரியாய் வரலை.  கிட்டேயும் போக முடியாது.  பள்ளத்தில் இறங்கி மேட்டில் ஏறணும். :))))

Thursday, August 15, 2013

ட்ரியோ, ட்ரியோ, ட்ரியோ, ட்ரியோ!



வைரவன் பட்டிக்கு நாங்க போனப்போ அப்போத் தான் ரேக்ளா பந்தயம் நடந்து முடிஞ்சிருந்திருக்கு.  முன்னாலேயே தெரியாமப் போச்சேனு வருத்தமா இருந்தது.  ரொம்ப வருஷம் ஆச்சு ரேக்ளா பந்தயம் பார்த்தே! :( சரி போனாப் போகுதுனு மாடுகளையும் அங்கே வைரவருக்காகக் காத்திருந்த ரதத்தையும் படம் எடுத்துக் கொண்டேன்.  கோயிலுக்குள்ளே எடுக்கக் கூடாது. மேலே உள்ள மாடுகளை அதன் சொந்தக்காரர் அர்ச்சகரிடம் விபூதி, குங்குமம் போடுவதற்காக அழைத்து வந்துவிட்டுத் திரும்பக் கூட்டிச் செல்கிறார்.



வைரவருக்குக் காத்திருக்கும் ரதம்.  

ரேக்ளாவில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகளும், ரேக்ளா வண்டியும்.  எல்லாத்தையும் மினி லாரியில் ஏத்திட்டாங்க. இதுவும் ஏத்தப்போகும் சமயம் அவசரமாக எடுத்தேன். :)



மாடுகளின் சொந்தக்காரர்கள் பெயர் அறிவிக்கப் பட்டதும் மாடுகளோடு போய்ப் பரிசு வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.  இன்னொருத்தர் பரிசு வாங்கச் செல்கிறார்.